திருமழிசையாழ்வார் அருளிச் செய்த நான்முகன் திருவந்தாதி
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்
சீராமப்பிள்ளை அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
நாராயணன் படைத்தான் நான்முகனை, நான்முகனுக்கு
ஏரார்சிவன் பிறந்தா னென்னுஞ்சொல்,-சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே*, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து.
நான்முகன் திருவந்தாதி
2382
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்,-யான்முகமாய்
அந்தாதி மேலிட்ட டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து.#
1
2383
'தேருங்கால் தேவன் ஒருவனே,' என்றுரைப்பர்
ஆரு மறியார் அவன்பெருமை,-ஓரும்
பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்,
அருள்முடிவ தாழியான் பால்.
2
2384
பாலிற் கிடந்ததுவும் பண்டரங்கம் மேயதுவும்,
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார்,-ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?
3
2385
ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே,-வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்
சொல்லானை சொன்னேன் தொகுத்து.
4
2386
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,
வகிர்த்த வளையுகிர்தோள் மாலே,-உகத்தில்
ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,
அருநான்கு மானாய் அறி.
5
2387
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,
சிறியார் சிவப்பட்டார் செப்பில்,-வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்,
ஈனவரே யாதலால் இன்று.
6
2388
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே,-நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே*
நீயென்னை யன்றி யிலை.
7
2389
இலைதுணைமற் றென்னெஞ்சே* ஈசனை வென்ற
சிலைகொண்ட செங்கண்மால் சேரா,-குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த,
கூரம்பன் அல்லால் குறை.
8
2390
குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து,
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி,-கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்,
அண்டத்தான் சேவடியை ஆங்கு.
9
2391
ஆங்கார வாரம் அதுகேட்டு, அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி,-யாங்காண
வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான்,
வல்லரே யல்லரே? வாழ்த்து.
10
2392
வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவி,மகுடம்
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால்,-சூழ்ந்த
துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை,
வழாவண்கை கூப்பி மதித்து.
11
2393
மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ,
மதித்தாய் மதிகோள் விடுத்தாய்,-மதித்தாய்
மடுக்கிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி
விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு.
12
2394
வீடாக்கும் பெற்றி யறியாது, மெய்வருத்திக்
கூடாக்கி நின்றுண்டு கொண்டுழல்வீர்,-வீடாக்கும்
மெய்ப்பொருள்தான் வேத முதற்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா யணன்.
13
2395
நாரா யணனென்னை யாளி, நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால்தான்,-பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு,
ஆசைப்பட் டாழ்வார் பலர்.
14
2396
பலர்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்,
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த-வலராகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்,
நீர்க்கண்டன் கண்ட நிலை.
15
2397
நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னார் தாமேமாற் றாக,-பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய,
தேராழி யால்மறைத்தா ரால்.
16
2398
ஆல நிழற்கீழ் அறநெறியை, நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,-ஞாலம்
அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு.
17
2399
மாறாய தானவனை வள்ளுகிரால், மார்விரண்டு
கூறாகக் கீறிய கோளரியை,-வேறாக
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்
சார்த்தி யிருப்பார் தவம்.
18
2400
தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை,
அவம்செய்த ஆழியா யன்றே,-உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ.
19
2401
நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்,
நீயே தவத்தேவ தேவனும்,-நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை.
20
2402
இவையா பிலவாய் திறந்தெரி கான்ற,
இவையா எரிவட்டக் கண்கள்,-இவையா
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
அரிபொங்கிக் காட்டும் அழகு?
21
2403
அழகியான் தானே அரியுருவன் தானே,
பழகியான் தாளே பணிமின்,-குழவியாய்த்
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே,
மீனா யுயிரளிக்கும் வித்து.
22
2404
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து,-மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.
23
2405
நிகழ்ந்தாய்பால் பொன்பசுப்புக் கார்வண்ணம் நான்கும்,
இகழ்ந்தா யிருவரையும் வீயப்,-புகழ்ந்தாய்
சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்,
மனப்போர் முடிக்கும் வகை.
24
2406
வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்
வகையால் வருவதொன் றுண்டே,-வகையால்
வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்,
வயிர வழக்கொழித்தாய் மற்று.
25
2407
மற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை,
கற்றைச் சடையான் கரிகண்டாய்,-எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்
கண்டுகொள் கிற்கு மாறு.
26
2408
மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள்,-நீறாடி
தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை
யான்காண வல்லேற் கிது?
27
2409
இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது,-இதுவிலங்கை
தானொடுங்க வில்நுடங்கத் தண்தா ரிராவணனை,
ஊனெடுங்க எய்தான் உகப்பு.
28
2410
உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
மகப்புருவன் தானே மதிக்கில்,-மிகப்புருவம்
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன்.
29
2411
அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான்,-அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல்.
30
2412
மேல்நான் முகனரனை யிட்ட விடு சாபம்,
தான்நா ரணனொழித்தான் தாரகையுள்,-வானோர்
பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்
கருமாயம் பேசில் கதை.
31
2413
கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள,
உதைப்பளவு போதுபோக் கின்றி,-வதைப்பொருள்தான்
வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ,
ஆய்ந்த குணத்தான் அடி.
32
2414
அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை
பிடித்தொசித்துப் பேய்முலைநஞ் சுண்டு,-வடிப்பவள
வாய்ப்பின்னை (*)தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,
கோப்பின்னு மானான் குறிப்பு.

(*) தோளிக்கா என்பதும் பாடம்.
33
2415
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நன்மை பயக்க,-வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள்.
34
2416
தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான்,-நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை?#
35
2417
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெள்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில்,-நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனா வான்.
36
2418
வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,
தானுலவு வெங்கதிரும் தண்மதியும்,-மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்
அண்டந் திருமால் அகைப்பு.
37
2419
அகைப்பில் மனிசரை யாறு சமயம்
புகைத்தான், பொருகடல்நீர் வண்ணன்,-உகைக்குமேல்
எத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும்,
அப்போ தொழியும் அழைப்பு.
38
2420
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
இழைப்பன் திருக்கூடல் கூட,-மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு.
39
2421
வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன்,-கற்கின்ற
நு}ல்வலையில் பட்டிருந்த நு}லாட்டி கேள்வனார்,
கால்வலையில் பட்டிருந்தேன் காண்.
40
2422
காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
ஓண விழவில் ஒலியதிர,-பேணி
வருவேங் கடவா*என் னுள்ளம் புகுந்தாய்,
திருவேங் கடமதனைச் சென்று.
41
2423
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,
நின்று வினைகெடுக்கும் நீர்மையால்,-என்றும்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,
அடிக்கமலம் இட்டேத்து மங்கு.
42
2424
மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை,
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான்,-திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும்,
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு.
43
2425
கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
தண்ட அரக்கன் தலைதாளால்-பண்டெண்ணி,
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,
போம்குமர ருள்ளீர் புரிந்து.
44
2426
புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
பரிந்து படுகாடு நிற்ப,-தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே,
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.
45
2427
வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை,-எப்பாடும்
வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,
நாடுவளைத் தாடுமேல் நன்று.
46
2428
நன்மணி வண்ணனு}ர் ஆளியும் கோளரியும்,
பொன்மணியும் முத்தமும் பூமரமும்,-பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்,
வேடு முடைவேங் கடம்.
47
2429
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும்,-வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை.
48
2430
மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலையாமை தானொருகை பற்றி,-அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,
கூறுவதே யாவர்க்கும் கூற்று.
49
2431
கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா,தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன்,-ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்
உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு.
50
2432
எனக்காவா ராரொருவ ரே,எம் பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால்,-புனக்காயா
வண்ணனே* உன்னைப் பிறரறியார், என்மதிக்கு
விண்ணெல்லா முண்டோ விலை?
51
2433
விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர்,-முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
கடமுண்டார் கல்லா தவர்.
52
2434
கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்
அல்லா லொருதெய்வம் யானிலேன்,-பொல்லாத
தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு.
53
2435
தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும்,-யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
கற்கின்ற தெல்லாம் கடை.
54
2436
கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்,
இடைநின்ற இன்பத்த ராவர்,-புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
யாரோத வல்லா ரவர்?
55
2437
அவரிரவென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
எவரு மெதிரில்லை கண்டீர்,-உவரிக்
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு.
56
2438
ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,
பெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில்,-மருங்கிருந்த
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்
ஆனவர்தா மல்லாத தென்?
57
2439
என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,
மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான்,-என்னெஞ்ச
மேயாயை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்
தாயானுக் காக்கினேன் அன்பு.
58
2440
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய்,-பொன்பாவை
கேள்வா* கிளரொளியென் கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.
59
2441
'ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள்' என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மையை,-கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்.
60
2442
மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,
தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,-எனக்கேதான்
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,
சென்றொன்றி நின்ற திரு.
61
2443
திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,
கருநின்ற கல்லார்க் குரைப்பர்,-திருவிருந்த
மார்பன் சிரிதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,
தார்தன்னைச் சூடித் தரித்து.
62
2444
தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,-தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்,
பூசித்தும் போக்கினேன் போது.
63
2445
போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்
காதானை யாதிப் பெருமானை,-நாதானை
நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
சொல்லானை. சொல்லுவதே சூது.
64
2446
சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை,-யாதானும்
வல்லவா சிந்தித் திருப்பேற்கு, வைகுந்தத்
தில்லையோ சொல்லீ ரிடம்?
65
2447
இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு
படநா கணைநெடிய மாற்கு,-திடமாக
வையேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்
வையேனாட் செய்யேன் வலம்.
66
2448
வலமாக மாட்டாமை தானாக, வைகல்
குலமாக குற்றம்தா னாக,-நலமாக
நாரணனை நம்பதியை ஞானப் பெருமானை,
சீரணனை யேத்தும் திறம்.
67
2449
'திறம்பேன்மின் கண்டீர் திவடிதன் நாமம்,
மறந்தும் புறந்தொழா மாந்தர்,-இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள்,' என்றான், நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.
68
2450
செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,-கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான்.
69
2451
தானொருவ னாகித் தரணி யிடந்தெடுத்து,
ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும்,-யானொருவன்
இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்
சென்றாங் கடிப்படுத்த சேய்.
70
2452
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற-மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்.
71
2453
'இல்லறம் இல்லேல் துறவறமில்' என்னும்,
சொல்லற மல்லனவும் சொல்லல்ல,-நல்லறம்
ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே
யாவதீ தன்றென்பா ரார்?
72
2454
ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,
பேராழி யான்றன் பெருமையை,-கார்ச்செறிந்த
கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன்வைத்த
பண்டைத்தா னத்தின் பதி.
73
2455
பதிப்பகைஞர்க் காற்றாது பாய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை,-மதித்தவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லாதொன் றேத்தாதென் நா.
74
2456
நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும்-பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு.
75
2457
பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
ஈட்டிய தீயும் இருவிசும்பும்,-கேட்ட
மனுவும் சுருதி மறைநான்கும், மாயன்
றனமாயை யிற்பட்ட தற்பு.
76
2458
தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன்,-எற்கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,
எவ்வினையும் மாயுமால் கண்டு.
77
2459
கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்
கொண்ட தவத்தாற்கு உமையுணர்த்த,-வண்டலம்பும்
தாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து,அங்
காரலங்க லானமையா லாய்ந்து.
78
2460
ஆய்ந்துகொண் டாதிப் பெருமானை, அன்பினால்
வாய்ந்த மனத்திருந்த வல்லார்கள்,-ஏய்ந்ததம்
மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து.
79
2461
விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,
கரந்துலகம் காத்தளித்த கண்ணன்,-பரந்துலகம்
பாடின ஆடின கேட்டு, படுநரகம்
வீடின வாசற் கதவு.
80
2462
கதவு மனமென்றும் காணலா மென்றும்,
குதையும் வினையாவி தீர்ந்தேன்,-விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து.
81
2463
கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை,
நலந்தானு மீதொப்ப துண்டே?,-அலர்ந்தலர்கள்
இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்
விட்டேத்த மாட்டாத வேந்து.
82
2464
வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்,
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய்,-சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,
பின்னால்தான் செய்யும் பிதிர்.
83
2465
பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
எதிர்வன் அவனெனக்கு நேரான்,-அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில்.
84
2466
தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,
பொழுதெனக்கு மற்றதுவே போதும்,-கழிசினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,
வில்லாளன் நெஞ்சத் துளன்.
85
2467
உளன்கண்டாய் நன்னெஞ்சே* உத்தம னென்றும்
உளன்கண்டாய்;, உள்ளுவா ருள்ளத்,-துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை.
86
2468
இமயப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,
சமய விருந்துண்டார் காப்பார்,-சமயங்கள்
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு,
உண்டா னுலகோ டுயிர்.
87
2469
உயிர்கொண் டுடலொழிய ஓடும்பொ தோடி,
அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி,-செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது.
88
2470
பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,
வழுவா வகைநினைந்து வைகல்-தொழுவாரை,
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து,
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு.
89
2471
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள்,-மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
தாழ்வா யிருப்பார் தமர்.
90
2472
தமராவார் யாவர்க்கும் தாமரைமே லாற்கும்,
அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும்,-அமரர்கள்
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்
தாள்தா மரையடைவோ மென்று.
91
2473
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து,
நின்று மிருந்தும் நெடுமாலை,-என்றும்
திருவிருந்த மார்பன் சிரிதரனுக் காளாய்,
கருவிருந்த நாள்முதாக் காப்பு.
92
2474
காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்,
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும்,-ஆக்கை
கொடுத்தளித்த கோனே* குணப்பரனே, உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.
93
2475
மெய்தெளிந்தா ரென்செய்யார்? வேறானார் நீறாக,
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து,-பைதெளிந்த
பாம்பின் அணையாய்* அருளாய் அடியேற்கு,
வேமட்பும் கறியாகும் ஏன்று.
94
2476
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை,
ஆன்றேன் அமரர்க் கமராமை,-ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை
இடநாடு காண இனி.#
95
2477
இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்,
இனியறிந்தேன் எம்பெருமான்*உன்னை,-இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.#
96
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com